Social Icons

Pages

Sunday, January 07, 2018

மதுரை உலாத்தல் 🌺🌿 மீனாட்சி அம்மனைக் கண்டேன்


“சில மணி நேரமேனும் தன் தாயைப் பிரிந்திருந்த குழந்தையொன்று அவளைக் காணுமிடத்து, குதித்தோடிப் போய்க் கட்டியணைத்து அழுதழுது முத்தம் கொடுக்குமே அப்பேர்ப்பட்ட பரவச நிலையில் இருந்தேன் மதுரை மீனாட்சி அம்மாளைக் கண்ட அந்தக் கணத்தில்”
அதற்கு ஒரு மணி நேரம் முன்பதாக நினைவுத் திரையில்
வளையம் வளையம் போட்டு
Hotel Sabarees Residency, மேல மாசி வீதி
அறை இலக்கம்201
காலை ஐந்து மணி
முன் தினம் இரவு பன்னிரண்டு மணி வரை நித்திரை போக்குக் காட்டியதால் காலை ஐந்து மணிக்குத் தான் நித்திரை களைந்து அரக்கப் பரக்க எழும்ப முடிந்தது.
“மீனாட்சி அம்மன் கோவில் நடை எத்தனை மணிக்குத் தெறப்பாங்க சார்” - நான்
“மார்கழி மாசங்கிறதால காலை நாலரை மணிக்கே நடை தெறந்துடுவாங்க சார் சீக்கிரமே கிளம்பிப் போனீங்கன்னா கூட்டமில்லாமல் அம்மன் தரிசனம் பாக்கலாம்” - தங்குமிட முகாமையாளர்.
முன் தினமிரவு நிகழ்ந்த இந்த உரையாடலை முன் வைத்து காலை ஐந்து மணிக்காவது கோயிலுக்குள் போய் விட வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
ஆனால் “தப்புக் கணக்கைப் போட்டுத் தவித்தாய் தங்கமே ஞானத் தங்கமே” என்று மனது திட்ட விழுந்தடித்துக் காலைக் கடன்களை முடித்து விட்டு புதிதாக வாங்கி வைத்த ராம்ராஜ் வேட்டியைக் குலைத்து இடுப்பில் சுற்றி விட்டு மீனாட்சி அம்மன் கோயில் திசை நோக்கி மேற்குக் கோபுர வாசல் வழியாக விறு விறுவென்று நடக்கிறேன்.
முந்திய இரவு போலவே அந்த அதிகாலை இருட்டிலும் ஒளி பாய்ச்சிய கடைகள். புகைப்படக் கருவியை எடுத்து வரவில்லை. ஆலயத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க விட மாட்டார்கள் என்ற என் கணிப்புத் தப்பவில்லை. ஆனால் புகைப்படக் கருவியை நான் எடுத்துச் செல்லாததற்கு முழு முதற்காரணமே வேறு. மீனாட்சி அம்மனைத் தரிசிக்கத் தானே இத்தனை மைல் கடந்து வந்திருக்கிறேன். ஒளிப்படம் எடுக்க வேண்டும் என்ற கவனச் சிதறல் இல்லாமல் ஆசை தீர இந்தக் கோயிலை என் மனக்கண் வழியே நெஞ்சில் எழுப்ப வேண்டும் என்பதே எனக்கு முக்கியமாகப்பட்டது. ஆலய தரிசனம் முடிந்த பின்னர் தனியாக வந்து படம் எடுப்போம் என்று முடிவு கட்டினேன்.
மேற்குக் கோபுர வழியை எட்டிப் பிடிக்க அங்கே திரண்ட கூட்டத்தைக் கண்டதும் கால்கள் வேகமெடுத்தன. ஆனால் ஒவ்வொரு கோயிலுக்கும் போனால் கால் கழுவி, முகம் அலம்பி கோயில் உள் செல்லும் என் மரபை இங்கேயும் கைக்கொள்ள எண்ணி, “கால் அலம்பும் இடம் எங்கே இருக்குங்க” என்று எதிர்ப்பட்ட கோயில் பணியாளரைக் கேட்டேன். “தண்ணி குடிக்குற இடம் தான் இருக்கு” என்று அவர் காட்டிய திசைக்குப் போய் கைகளை அலம்பி விட்டு நீரை ஏந்திக் கால்களில் தெளித்து விட்டு மீண்டும் ஓடோடிப் போய்க் கூட்டத்தில் ஐக்கியமானேன்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுர வாசலில் இருந்து உள்ளே போனால் வேர் விட்டிருக்கும் ஒவ்வொரு கருங்கல் கால் தூண்களிலும் செதுக்கியிருக்கும் சிற்பங்களின் எழிலை நின்று நிதானித்து ரசிக்கிறேன். ஒரு பெரிய குன்றை அப்படியே பெயர்த்தெடுத்து வைத்தது போலப் பென்னம் பெரிய “முக்குறுணிப் பிள்ளையாரை”க் கும்பிட மறந்து வியஜ்து நின்றேன். ஆலயத்தின் உள்ளகத்தில் இருக்கும் தெப்பக்குளத்தருகே கூட்டமில்லை இளைஞன் ஒருவன் உட்கார்ந்து யோசித்துக் கொண்டிருந்தான். நானும் அந்தப் பக்கம் போய் நின்று பார்த்தேன். கோயிலின் உட் பிரகாரத்தின் பரிவார மூர்த்திகளைக் கும்பிட்டு விட்டு மூலவரைத் தரிசிக்கலாம் என்று சுற்றினேன்
சுற்றினேன் சுற்றிக் கொண்டே இருந்தேன். காரணம், எந்தப் பக்கத்தால் போனால் இந்தப் பக்கம் வரும் என்று குழம்பும் அளவுக்கு இந்தப் பிரமாண்ட ஆலயம் என்னைத் தொலைத்து விட்டது.
மதுரைக்காரர்கள் வழி காட்டுவதில் முன் நிற்பார்கள். ஆனால் நமக்குத் தான் அதைப் பின்பற்றித் தொடர் முடியவில்லை ஹிஹி
வெளியேறும் வழி தெரியாமல் திணறி ஆலய நிர்வாக பீடத்தில் இருந்த ஒருவரிடம் விசாரிக்க, அவரை முந்திக் கொண்டு பக்தர் ஒருவர் வழி காட்டினார்.
“இந்தா பாருங்க வலக்கைப் பக்கம் திரும்பினீங்கன்னா ....சந்நிதி அதுல இருந்து இடப் பக்கம் போய் கிழக்கால திரும்புங்க”
நான் “ங்கே”
காலை ஐந்து நாற்பத்தைந்து மணிக்குக் கோயிலுக்குள் போனவன் காலை ஏழே முக்கால் வரை மீனாட்சி அம்மன் கோயிலின் இண்டு இடுக்கு வரை தரிசித்துத் திருப்தி கண்டேன். என்னளவில் இரண்டு மணி நேரம் எடுத்து ஒரு கோயிலைச் சுற்றிப் பார்ப்பதென்பது அபூர்வம். ஆனால் இன்னொரு தடவை வரும் போது என் கண்ணில் அகப்படாதவை இன்னும் நிறைய இருக்கும்.
இதுவரை நான் பயணித்த ஆலயங்களில் கட்டணம் வழி தரிசன அனுபவம் கிட்டியதில்லை. அடிக்கடி போய் வந்த மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கூட அந்த முறைமை இருந்த போதும் அதை நான் பாவித்ததில்லை. ஆனால் மீனாட்சி அம்மன் கோயிலின் உள்ளே போனதும் தேர்த் திருவிழாவுக்குக் கூடியது போலத் திரண்ட கூட்டத்தைத் தாண்டி அம்மனைத் தரிசிப்பதென்றால் மணிக்கணக்காகும் போல என்றெண்ணிக் கட்டண வழி தரிசன வரிசைக்குள் புகுந்தேன். அங்கேயும் பொது வழியில் நின்ற மக்களின் பாதியளவு கூட்டம் தான். மீனாட்சி அம்மன் கோயிலின் அரை வாசிக் கூட்டத்தை ஐய்யப்ப பக்தர்கள் பங்கு போட்டிருக்கிறார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாக வெளியூரில் இருந்து வந்திருக்கும் சாமியே சரணம் ஐயப்பாக்கள். இன்னொரு புதுமை, தமிழில் பேசுபவர்களை விட தெலுங்கு, கன்னட மொழிக்காரர்கள் மாட்லாடக் கண்டேன். மூலவர் சுந்தரேஸ்வரைத் தரிசித்தேன்.
எனக்கு முன்னே கூட்டம் அசைந்தசைந்து மலைப்பாம்பாக நகர்கிறது. நானோ கை கூப்பிக் கொண்டு அம்பாள் சந்நிதியை எட்டி எட்டிப் பார்க்கிறேன். திரண்ட மனிதத் தலைகளை ஊடுருவி அம்மன் திருவுருவத்தைத் தேடும் கண்கள்.
தீபாராதனை ஒளி வட்டமாக வளைய அதனூடு தெரிந்த மீனாட்சி அம்மனைக் கண்டு அப்படியே அந்தத் திருவுருவத்தைக் கண்களில் தேக்கி நெஞ்சில் இருத்தினேன். இத்தனை ஆண்டுகளாய் அருவமாய் இருந்த அன்னையின் திருவுருவம் கண்டு நெகிழ்ந்தேன்.
ஒரு சில நிமிடத் துளிகள் என்றாலும் அந்த அற்புதமான கணங்கள் வாழ்நாள் தவத்தின் விளைச்சல் போலப் பட்டது.
நமக்கு மீறிய ஒரு சக்தி நம் கூடவே இருந்து நம்மை வழி நடத்துகின்றது. அந்தச் சக்தியின் தோற்ற வெளிப்பாட்டைக் காணும் போது அது அந்நியப்படுவதில்லை. தன் தாயைக் கண்டுணரும் பிறந்த குழந்தைக்கு ஒப்பான மன நிலைக்கு அது போய் விடுகிறது. அப்படியானதொரு நிலையில் தான் நான் அன்றிருந்தேன்.
“ஞான் கண்டு”
“ஞானே கண்டுள்ளு”
“ஞான் மாத்ரம் கண்டிட்டுள்ளு”
என்று பாலாமணி குருவாயூரப்பனை அவன் சந்நிதியில்
உன்னியேட்டா ரூபத்தில் கண்டு நெகிழ்ந்து, கண்கலங்கினாளே
( பார்க்க https://youtu.be/6xLzlzIkFTA )
அப்படியானதொரு பரவச நிலை அது.
அந்த அம்மாளாச்சி என் கண் முன்னே.
மேலதிக வாசிப்புக்கு “நந்தனம்” திரைப்படம் குறித்த என் பகிர்வு
https://kanapraba.blogspot.com.au/2008/01/blog-post.html
மதுரை உலாத்தல் தொடரும்
அடுத்து வருவது “மேலமாசி வீதியிலே”
















No comments: