Social Icons

Pages

Friday, June 27, 2008

கேள்வியும் நானே பதிலும் நானே ;-)


நம்ம கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) தன் மாதவிப் பந்தலில் பகிரங்கக் கேள்விக் கணைகளை என் மீது பாய்ச்சிருந்தார். எனவே கம்போடிய உலாத்தலுக்கு ஒரு சின்ன இடைவெளி விட்டு, இந்தப் பதிவு அவருக்கான என் பதிலும் இன்னொரு நண்பருக்கான என் கேள்வியுமாக இருக்கின்றது.

சரி முதலில் கே ஆர் எஸ் கேட்ட கேள்விகளுக்கு என் பதில்களைச் சொல்கிறேன்.

கேள்வியின் நாயகனே! என் கேள்விக்கு பதில் ஏதைய்யா?

1. உங்கள் FM றேடியோ நிகழ்ச்சி அனுபவங்களில், நீங்கள் எதிர்கொண்ட இனிமையான, மெல்லிய, ரொமான்டிக்கான கட்டம் எது?

இந்த ஆண்டோடு என் வானொலி வாழ்க்கை பத்தாண்டுகளைத் தொடுகிறது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்படியொரு கேள்வியை முதன் முதலில் சந்திக்கிறேன்.

முதலில் எப்படி வானொலி உலகுக்கு வந்தேன் என்பதைச் சுருக்கமாகச் சொல்லி விட்டு பதிலுக்கு வருகின்றேன். அப்போது மெல்பன் (அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம்)1998 வாக்கில் நான் பல்கலைக் கழகத்தின் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் அங்குள்ள ஒரு மணி நேர 3ZZZ தமிழோசை வானொலியில் அறிவிப்பாளராக இணைத்துக் கொண்டேன். பின்னர் 2000 ஆண்டிலிருந்து ஒரு வானொலி நிலையத்திலும், கடந்த 2007 யூன் 1 ஆம் நாளில் இருந்து அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் சேவை அடிப்படையில் பணி புரிகின்றேன். அதாவது என் முழு நேரத்தொழில் ஒரு நிறுவனத்தின் திட்ட முகாமைத்துவமும், நிதிப் பிரிவும் ஆகும்.
வானொலிப் பணி என்பது வாரத்தில் இரு நாட்களின் மாலை நேரத்தில் 5 மணி நேரம் ஊதியம் பெறாத சேவையாகக் கொடுப்பது. ஆத்ம திருப்தி மட்டுமே இங்கே கிடைக்கும்.

சரி உங்க கேள்விக்கு என் பதிலைப் பார்போம். புலம்பெயர்ந்த சூழலில் ஆஹா எப் எம் ரேஞ்சுக்கு வானொலியில் கலகலக்க முடியாது. நம் தாயகத்துச் சூழ்நிலையைப் பொறுத்தே வானொலிப் படைப்பும் அமையும். நிறையத் தயார்படுத்தலோடு போனால் திடுதிப்பென்று அந்த நிகழ்ச்சியே செய்யமுடியாது வேறு நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.
சந்தோஷமான தருணங்களுக்குச் சரிசமமாக எதிர்ப்புக்களும், வேதனைகளும் கூடக் கிடைத்திருக்கின்றது. சுனாமி நடந்த நாள் இரவும், தொடர்ந்த நாட்களும் அழுதுகொண்டே தம் உறவினர்களைத் தேடி வானொலியில் அழைத்த நேயர்களையும் மறக்கமுடியாது.

மலரக்கா போன்ற மறக்கமுடியாத நேயர்கள் இன்னும் என்னோடு கூடவே வருகின்றார்கள்.

ஒரு சம்பவம் சொல்கிறேன். ஒருமுறை ம.தி.மு.க தலைவர் வை.கோவை நேரடியாக வானொலியில் பேட்டி கண்டபோது ஒரு ஈழத்தமிழ் அறிவிப்பாளரிடமிருந்து சாமரம் வீசும் கேள்விகளை எதிர்பார்த்தார் போலும். என் கேள்விகளில் அவர் அந்த நேரத்தில் எடுத்த தி.மு.க கூட்டணியில் இருந்து அ.தி.மு.க தாவிய நிலைப்பாடுகளை வைத்துக் கேள்வி ஒன்று கேட்டேன். இன்னும் சில கேள்விகளை அவர் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் தி.மு.க ஏஜெண்டாக இருந்து கொண்டு கேள்வி கேட்கிறீர்கள் என்று உச்சஸ்தாயியில் போட்டாரே ஒரு போடு. அந்தச் சம்பவம் பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னும் விரிவாகச் சொல்கிறேன்.

சந்தோஷமான கணங்கள் என்று கேட்டால்

தொலைபேசியில் அழைத்த அதே நாளில் எந்தவித பிகு, பந்தா இல்லாமல் வானொலிப் பேட்டி தந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் பேசிய அந்த நிமிடங்கள் (அவரை பேட்டியெடுக்கும் போது அடிக்கடி இது நிஜமா என்று என்னையே மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்)
இயக்குனர் பாரதிராஜாவுடன் கொஞ்சம் இன்னும் ஆழமாகக் கேள்வி கேட்டு அவரது பழைய நினைவுகளை மீட்க வைத்தது (வேதம் புதிதில் நிழல்கள் ரவியுடன் சண்டை போட்டு பின்னர் பாரதிராஜாவே டப்பிங் பேசியதை எல்லாம் சொல்லியிருந்தார்) இப்படி நிறைய, நிறைய, நிறையவே சொல்லலாம்.

ஓ நீங்க ரொமாண்டிக் கணங்களையா கேட்டீங்க ;-)
2001 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து வருஷமாக ஒரு மணி நேரப் படைப்பாக "காதலர் கீதங்கள்" என்ற நிகழ்ச்சியைக் கொடுத்திருந்தேன். வெறும் பாடல்களை மட்டுமே போடாமல் புதுசு புதுசா ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கொடுத்துக் கொண்டிருந்தேன். பாடல் தெரிவிலும் ஒரு குறிப்பிட்ட காலத்துப் பாடல்கள், அல்லது இசையமைப்பாளரைத் தேர்வு செய்து கொடுத்ததால் நிகழ்ச்சியில் வரும் பாடல்கள் சீராக இருக்கக் கூடியதாக இருந்தது. அவ்வப்போது குறித்த சில கவிஞர்களின் கவிதைத் தொகுதிகளில் இருந்து இரண்டு அடியைக் கொடுத்து அதற்கேற்ற பாடல் என்றெல்லாம் உருகி உருகிக் கொடுத்தேன். அப்போது தான் நீங்க கேட்ட மெல்லிய, ரொமாண்டிக் கட்டமொன்றை எதிர்கொண்டேன். ஆனால் பாதுகாப்பாக விலகிக் கொண்டேன். ஆனால் இந்தக் காதலர் கீதங்கள் தொகுப்பு இன்னொரு இடத்தில் மெல்ல ஒரு விதையை விதைத்.... மெல்ல இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன் ;-)


2. இறைவன் உங்கள் முன் தோன்றி, உங்களை, இலங்கை அரசுக்கு சர்வ சக்தி படைத்த "ஒரு நாள் அதிபர்" ஆக்குகிறார் என்று வைத்துக் கொள்ளுங்களேன்!
உங்கள் முதல் ஆக்ஷன் (செயல்பாடு) என்னவாக இருக்கும்? (இனிய கற்பனை)


நான் ஒரு நாள் அதிபரானால் முதல்வன் அர்ஜீன் பாணியில் ஏகத்துக்கும் அதிகாரம் பண்ணமாட்டேன். அப்புறம் பாராளுமன்றம் எதுக்கு இருக்கு? எந்தப் பெரிய தீர்மானம் ஆனாலும் பெரும்பான்மை வாக்கு பாராளுமன்றத்தில் கிடைச்சாகணுமே?

எனவே முதன் முதலில் நான் செய்ய விரும்புவது இலங்கை அரசினால் சந்தேகம் என்ற ஒரே பார்வையில் நூற்றுக்கணக்கில் கைது செய்யப்பட்டு வருஷக்கணக்கில் (சிலர் பத்து வருஷங்களுக்கும் மேல்) இருக்கும் அப்பாவித் தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அனைவரையும் உடனே விடுதலையாக்கி அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் குடும்பத்தோடு சேர்க்குமாறு கட்டளை போடுவேன். இதுதான் என்னால் முதலில் செய்யக்கூடியது.

3. பதிவுலகில் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டும்? சிக்காமல் இருக்க என்னெல்லாம் செய்ய வேண்டும்?
(அப்பாடா, சிக்காத நீங்க, இப்போ சிக்கிட்டீங்க :-)


இந்தக் கேள்வி, வேலு நாயக்கரைப் பார்த்து நீங்க நல்லவரா? கெட்டவரா? என்று கேட்பது போலிருக்கு. நானும் சர்ச்சையில் அகப்பட்டிருக்கிறேன், சர்ச்சைகளில் இருந்தும் ஒதுங்கியும் இருக்கிறேன்.

எந்தெந்தச் சர்ச்சைகளில் அகப்பட்டுக் கொண்டேன் என்பதை உதாரணத்துக்கு ஒரு சில என் பதிவுகள் மூலமே காட்டுகிறேன், நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

சிதம்பரம் கோயிலைப் பார்க்க வேண்டும் என்ற தீரா ஆசையில் 2006 ஆம் ஆண்டு முதன் முதலாக சிதம்பரம் கோயில் பார்க்கப் போன கதை சிதம்பரத்தில் ஓர் அப்பாவிசாமி!

எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு அஞ்சலியாக நான் அவரோடு கண்ட ஒலிப்பேட்டி

கொஞ்சம் இருங்க, எங்கே அந்தப் பதிவுகளில் சர்ச்சைக்குரிய பின்னூட்டங்களைக் காணலியே என்று கேட்கிறீர்களா? அவற்றையெல்லாம் போடாமலேயே கடாசி விட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் சொல்ல வந்த கருத்தைப் புரியாமலோ,பதிவை வாசிக்காமலோ, அல்லது பதிவின் நோக்கத்தைத் தெரியாமலோ வந்து சகதி இறைப்பவர்களை அனுமதிக்க மாட்டேன், அது என் நேரத்தையும் வீணடிக்கும். சுஜாதாவின் அந்தப் பதிவைக் கொடுத்ததற்காக இன்னும் கூட ஸ்பாம் மெயில்கள், வைரஸ் லிங்க் பொருத்திய பின்னூட்டங்களை வெகுமதிகளாகப் பெற்றுக் குப்பைத் தொட்டியில் போட்டு வருகின்றேன்.
என் சோகம் என்னோடு தான் என்று தான் பாடவேணும் போலிருக்கு ;-)

இவை தவிர பதிவராக இருக்கும் வகையில் நான் எதிர்கொள்ளும் இன்னொரு சர்ச்சை. எதிலும் பிழை கண்டு பிடிக்கும் ஒரு கூட்டம். எத்தனை முறை நான் பதிவு எழுதுகிறேன், எத்தனை முறை பின்னூட்டம் போடுகிறேன் என்பதைக் கண்காணிக்க ஒரு கூட்டம் இருக்கு. ஊரில் பிரச்சனை நடக்கும் போது ஏன் ஒரே பாட்டு மட்டும் போடுறார், என்று பேசும் ஒரு கூட்டமும் இருக்கு.இதற்கு சயந்தன் பாணியில் என் பதில், பாட்டுக் கேட்பதால் தாயக உணர்வு அற்றுவிடும் என்றால் அது இருந்தென்ன இல்லாது விட்டால் என்ன?
( நான் பாட்டு மட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறேன்?)

எனவே சர்ச்சைகளில் சிக்க மேலே உள்ள உதாரணங்களைப் பயன்படுத்தலாம்.

விழாமல் இருப்பதற்கு ஒரே வழி =>
பதிவுலகை விட்டு விலக வேண்டியது தான் ;-)

4. இசையில் நீங்கள் அனைத்து வகை இசையும் விரும்பிக் கேட்பீர்கள்!-அறிவேன்!
தமிழகத்தில் தமிழிசை இயக்கம் சிறிது காலமாகத் தான் நன்கு மணம் வீசி வருகிறது! ஆனால் அதே சமயத்தில் பிறமொழி இசை ஒவ்வாமையும் நம்மிடையே சிறிது இருக்கத் தான் செய்கிறது!
கர்நாடக இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர், மற்ற இசை என்றால் சில குறிப்பிட்ட வகுப்பினர் என்று ரசிகர் வட்டம் தெரிந்தோ தெரியாமலோ ஏற்பட்டு விடுகிறது!

விபுலானந்த அடிகளைக் கொடுத்த ஈழத்திலும், இதே நிலை தானா?
அப்போது எப்படி? இப்போது எப்படி?


ஈழத்து இசை ரசிகர்கள் என்று எடுத்துக் கொண்டால் ஆரம்ப வகுப்பு முதலே பண்ணிசை, மற்றும் கர்நாடக இசை வகுப்புக்கள், நடனம் ஆகியவை பள்ளிகளில் ஒரு பாடமாக இருக்கின்றது. குரல் வளமோ நாட்டமோ இல்லாதவர்களுக்குத் தான் சித்திரம் பழகுதல் வகுப்பாம் ;-) இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மணி ஐயர் போன்ற ஜாம்பவான்கள் தமிழகத்தில் இருந்து வந்து பல ஆண்டு காலம் வானொலி வழி கர்நாடக இசையைக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அதே போல் யாழ்ப்பாணத்தில் "இராமநாதன் நுண்கலைப் பீடம்" என்ற ஒரு பல்கலைக்கழகப் பிரிவுக்கு முன்பெல்லாம் மகாராஜபுரம் சந்தானம், லஷ்மி நாராயணா (எல்.வைத்யநாதனின் தந்தை) போன்ற இசைவல்லுனர்கள் வந்து பல வருடங்கள் அங்கேயே தங்கி ஈழத்தின் இசை மரபு தழைத்தோங்க உதவியிருக்கிறார்கள்.

நான் தாயகத்தில் இருந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் இசைநிகழ்ச்சிக்கான அரங்கைத் தான் கொண்டு நடாத்திய இளங்கலைஞர் மன்றத்தில் அமைத்து துணை புரிந்தார் சங்கீத மேதை திரு பொன் சுந்தரலிங்கம் அவர்கள். திரு. திலக நாயகம்போல் போன்ற சங்கீதமேதைகள் மதம் பேதம் கடந்தும் கர்நாடக இசை, தமிழிசை அங்கிருப்பதைக் காட்டுகின்றது. தென் தமிழீழத்திலும் விபுலாலந்தா இசை நடனக் கல்லூரி அங்குள்ள மக்களுக்கு இதே பாங்கில் இந்த இசைமரபு பல மட்டத்து மக்களுக்கும் போய்ச் சேர உதவுகின்றது. புலம்பெயர் சூழலிலும் நம்மவரின் குடும்பங்களில் சராசரியாக எல்லாப் பெற்றோருமே தம் பிள்ளை நடனத்திலோ அல்லது இசையிலோ சிறப்பாக வளர வேண்டும் என்ற முனைப்பைக் காட்டுகின்றார்கள்.

இவ்வளவு முன்னுரையும் கொடுத்து விட்டேன். ஆனால் என் பார்வையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னவென்றால், நம்மவரிடையே இப்படியான வகுப்பு ரீதியான பாகுபாடு இசைக்கோ அல்லது ரசிகர் வட்டத்துக்கோ நான் அறிந்தவரை, என் அனுபவத்தில் அவ்வளவாகக் கொடுக்கப்படுவதில்லை. ஆனால் அனேக இசைக்கச்சேரிகள் தமிழிசை இல்லாது நிறைவுறுவதேயில்லை. ஈழத்தில் உள்ள கர்நாடக இசை வித்துவான்களும் தம் எல்லைகளை விசாலமாக்கி குறிப்பிட்ட ஒரு வகுப்புக்கே தம் இசை போய்ச் சேரவேண்டும் என்ற நினைப்பில்லாமல் செயற்படுவதையும் சொல்லி வைக்க வேண்டும். எனவே அங்குள்ள வித்துவான்களின் செயற்பாடுகள் தான் இப்படியான பாகுபாட்டைப் பெருமளவு களைகின்றது.


இன்றைய புலம்பெயர் சூழலில் பாடகி நித்யசிறீக்கு பெரும் அபிமானம் ஏற்படக் காரணமே அவர் இங்கு கொடுக்கும் இசை நிகழ்ச்சிகளில் தமிழிசை அதாவது பாரதி, பாரதிதாசன் பாடல்களைப் பாடுவதே காரணம்.

இதே நேரம் புலம்பெயர் சூழலில் நிலவும் இன்னொரு வேதனையான விஷயத்தையும் இங்கே சொல்லி வைக்கின்றேன், தம் பிள்ளை நடனம் கற்ற பின்னர் (சில இடங்களில் அரைகுறை ஞானம்) நிறையச் செலவழித்து ஒரு பெரும் கல்யாண வீடு போல் நடன அரங்கேற்றம் காட்டினால் போதும் என்ற மனோநிலையில் தான் 90 இற்கும் அதிகமான வீதமான பெற்றோர் இருக்கின்றார்கள். நடனத்தோடு ஓப்பிடும் போது சங்கீதம் கற்கும் எண்ணிக்கை அருகி வருகின்றது.

இவை தான் கே.ஆர்.எஸ் இற்கு என் பதில்கள் ;-) கொடுத்ததை வச்சுத் திருப்தி அடையுங்கப்பா.

சரி இனி நான் கேள்வி கேட்கத் தேர்ந்தெடுத்திருக்கும் பதிவர், உடன்பிறவாச் சகோதரன் ஆயில்யன்.

கேள்வி 1. பதிவுலகிற்கு வருவதற்கு முன்னர், வந்த பின்னர் உங்களின் இணையச் சூழல்/வாழ்க்கை எப்படியிருக்கின்றது?

கேள்வி 2. தமிழகத்துப் பிரதேச நடையில் வரும் பதிவுகள் மிகக் குறைவு என்று நான் கணிக்கின்றேன், இந்த நிலையில் ஈழத்து மொழி வழக்கில் வரும் பதிவுகளை நீங்கள் வாசித்துப் புரியக்கூடியதாக இருக்கின்றதா அல்லது தாவு தீருகின்றதா?

கேள்வி 3. நீங்கள் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவர், பதிவுகளிலும் கட்டுக்கோப்பான சிந்தனைகளை அவ்வப்போது பதிவுகளாகக் கொடுப்பவர், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முற்போக்காக எதையாவது செய்ய் வேண்டும் என்றால் எதைச் செய்வீர்கள்?

கேள்வி 4. உங்க சொந்த ஊரில் பஞ்சாயத்து தலைவர், அல்லது ஐ.நா சபைச் செயலாளர் இதில் ஏதாவது ஒரு பதவியை எடுக்கலாம் என்றால் எதை எடுப்பீர்கள்? அந்தப் பதவியை வச்சு என்ன செய்வீர்கள்?

கே.ஆர்.எஸ் வேண்டுகோளுக்கிணங்க ஒரு போனஸ் ஆப்பு வைக்கிறேன்
நடிகை ஸ்ரேயாவுடன் நாயகனாக நடிக்க ஒரு வாய்ப்பு அல்லது பாடகி ஸ்ரேயாவுடன் டூயட் பாட ஒரு வாய்ப்பு வந்தால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள் (இரண்டில் ஒன்றைத் தான் செய்ய முடியும்னு கட்டளை வேற ;-))

Sunday, June 15, 2008

Angkor Wat கண்டேன்

அங்கோர் வாட்டின் முகப்புப் பரப்பை நோட்டமிட்டுக்கொண்டே அங்கே தூண்களிலும், வாயில்களிலும் உள்ள சிற்பச் செதுக்கு வேலைப்பாடுகளையும், உடைந்து போன கற்சிலைகளையும் பார்த்துக் கொண்டிருக்க, என் வழிகாட்டி டேவிட் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

கம்போடியாவின் கோயில்களுக்கும், முக்கிய மடாலயங்களுக்கும், சிற்பச் செதுக்கு வேலைகளுக்கும் ஏற்பட்ட அழிவு இயற்கையாக ஏற்பட்டதன்று. இந்த நாட்டின் இந்த அனர்த்தம் ஏற்பட முக்கிய காரணமே மனிதன் தான். அவ்வப்போது நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்களும், மாறி மாறி அமைந்த அரசுகளின் மாறுபட்ட மதக் கோட்பாடுகளுமே இந்த அனர்த்தங்களின் மூல காரணி. ஆரம்பத்தில் இந்து அரசிலிருந்து மாற்றம் கண்ட பெளத்த அரசுகளும், பின்னாளில் கம்யூனிச சித்தாந்தத்தில் மதங்களைப் புறந்தள்ளிய பொல்பொட்டின் (Pol Pot) க்மருச் அமைப்பின் அரசுமே இவ்வகையான அழிவின் மூலகாரணிகள்.

தென் கிழக்காசியாவின் செழிப்பும் வளர்ச்சியும் கி.பி முதலாம் நூற்றாண்டில் இருந்தே ஆரம்பிக்கின்றது. மேற்குலகத்திலிருந்து கீழைத்தேய நாடுகள், குறிப்பாக சீனர்களின் வர்த்தக மைய்யமாக இது விளங்கியிருக்கின்றது. சீன, இந்திய வாணிபர்கள் பெருமளவில் இந்தப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். அதில் கம்போடியாவும் அடக்கம். இந்த வாணிபர்களுடன் பயணித்த அந்தணர்கள் மூலம் இந்து மதத்தின் பரம்பலும் இங்கே அதிகரித்தது.

அங்கோர் என்பதற்கு தலைநகரம் அல்லது புனித நகரம் என்று பொருள்படும். கி.பி 9 ஆம் நூற்றாண்டில் இருந்து கி.பி.12 ஆம் நூற்றாண்டு வரை முக்கியமானதொரு நகராக இது விளங்கியிருக்கின்றது. உலகளாவிய ரீதியில் புகழ்பெறும் அங்கோர் வாட் ஆலயம் குறித்த வரலாற்றுத் தகவலைப் பார்ப்போம். இந்த ஆலயம் கி.பி 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இரண்டாம் சூர்யவர்மனால் நிர்மாணிக்கப்பட்டது. இந்த மன்னன் குறித்த தகவல்களை இங்கே முன்னர் இட்டிருக்கின்றேன். அங்கோர் வாட் ஆலயத்தின் பிரமாண்டமும் அதன் உருவாக்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொண்ட சிரத்தையும் பார்ப்போர் கண்களை வியப்பில் ஆழ்த்தும். பிரமிட் வடிவினை ஒத்த மூன்று அடுக்குகளையும், தாமரை வடிவினதான ஐந்து கோபுரங்களையும் தாங்கிய அமைப்பில் இவ்வாலயம் நிர்மாணிக்கப்படிருக்கின்றது. இந்தக் கோபுரங்கள் நிலமட்டத்தில் இருந்து 65 மீட்டர் நீளமானவையாகும்.

இரண்டாம் சூர்யவர்மன் இந்து மதத்தைப் பின்பற்றிய அரசனாவான். எனவே இந்த ஆலயம் ஒரு இந்து ஆலயமாகவே அதாவது விஷ்ணுக்கடவுளுக்காக அவனால் அமைக்கப்பட்டதாகும். பொதுவாகவே இந்திய நாட்டின் கோயில்களின் கட்டிடக்கலையையும் கிரேக்கக் கட்டிடக்கலையையும் கலந்த ஒரு அமைப்பிலேயே இவ்வாலயம் இருக்கின்றது. அங்கோர் வாட்டின் கட்டிட அமைப்புக்கு சலவைக்கல்லே பயன்பட்டிருக்கின்றது.

ஆலயத்தைச் சுற்றி அகழியும், பெருமதிலுமாக 1300 மீட்டர் X 1300 மீட்டர் அளவில் அரணாக அமைந்திருக்கின்றன. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஆலயத்தின் முழுப்பகுதியும் அமைந்திருக்கின்றது. ஆலய உட்பரப்பில் நுழைந்ததுமே வலதும் இடதுமாக இருபக்கமும் உடைந்து போன இரு நூலகங்கள் இருக்கின்றன. கம்போடியாவில் நான் கண்ட பெரும்பாலான ஆலயங்களில் இப்படி இருபக்கமும் அமைந்த நூலகங்களோடு தான் இருக்கின்றன.


அங்கோர் சகாப்பதத்தினைப் பறைசாற்றும் சிற்பக்கலைக்கும் தனித்துவமான உதாரணமாக மதிற்சுவர்களிலும், கோயில் உட்புறப்பரப்புகளிலும் விதவிதமான சிற்பவேலைகள் விளங்குகின்றன. 36 வடிவில் 2000 வகையான அப்சரா என்னும் தேவதைகளின் சிற்பவடிவங்கள் இந்த ஆலயத்தில் மட்டுமே இருக்கின்றன.

அத்தோடு இந்து புராணக்கதைகளின் முழுமையான வரலாற்றை கோயிலின் உட்புறச்சுவர்களில் சிற்பமாகவே வடித்திருக்கின்றார்கள். உதாரணமாக தேவர்களும் அசுரர்களும் வாசுகி என்னும் மலைப்பாம்பை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வரலாற்றின் ஆரம்பம் முதல் முடிவு வரை நீண்டதூரப்பரப்பில் சிற்பச் செதுக்காகக் காட்டப்ப்பட்டிருக்கின்றது. இவற்றை கமராப்பெட்டிக்குள் அடக்கமுடியாமல் பகுதி பகுதியாக எடுக்கவேண்டிய அளவிற்கு இவ் இதிகாசவரலாற்றுச் சிற்பவேலைகளின் நீளம் இருந்தது. இவ்வாறு தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும் போது ஏற்பட்ட களைப்பை மறக்கடிக்கும் விதமாக பாற்கடலில் இருந்து தோன்றி களி நடனம் புரிந்தவர்களே அப்சரா என்னும் தேவதைகள் என்பதையும் இச்சுவரில் பதிந்திருக்கும் சிற்பவேலைகள் காட்டுகின்றன.

அத்தோடு மகாபாரதப் போரில் பாண்டவர்களின் அணி, கெளரவர்களின் அணி என்று அத்தனை பேரையுமே சிற்பங்களாக வடித்து, குருஷோத்திரப்போரின் உச்சமும் காட்டப்படுகின்றது.

சிற்பங்கள் சிலவற்றில் செயற்கையாக சிவப்பு போன்ற வர்ணங்கள் மேற்பூச்சாக அமைந்திருந்தன. இது தாய்லாந்து நாட்டில் இருந்து படையெடுத்த சியாம் அரசின் கைங்கர்யம். தாய்லாந்துக்காரர்களுக்கு சிற்ப அமைப்புக்களை இயற்கையாக விடாமல் அவற்றுக்கு வர்ணம் தீட்டிப் பார்க்கும் ஆசை இருந்திருக்கிறது. அதையே இங்கும் காட்டியிருக்கிறார்கள்.

Sunday, June 01, 2008

Angkor Wat நோக்கிய பயணம்

மார்ச் 15,2008 சனிக்கிழமை காலை 7.30 மணி

ஏற்கனவே இணையம் மூலம் தங்குமிடம், மற்றும் அவர்களுடைய ஒழுங்கிலேயே சுற்றுலா வழிகாட்டி என்று ஏற்பாடு செய்திருந்தேன். நான் தங்கியிருந்த Angkoriana ஹோட்டலில் அதிகாலையே தூக்கம் கலைத்தேன். காரணம் நேர வித்தியாசம். குளித்து முடித்துக் கீழ் தளத்திற்கு வந்தபோது காலை ஆறரை தாண்டியிருந்தது. ஹோட்டலின் காலை உணவு பரிமாறும் இடம் சென்று ஆகாரத்தை எடுத்துக்கொண்டேன். தாயகத்தில் இருந்த காலத்தில் சாப்பிட்ட அதே சுவையை நினைவுபடுத்துமாற் போல இந்த ஊர்ப்பாணும் (bread) இருந்தது.

மணி ஏழரையைத் தாண்டவும் எனக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டி டேவிட் வந்தார். குள்ளமான தோற்றம், அசல் கம்போடியன் அவர். டேவிட்டின் இயற்பெயர் Sib Chong, உண்மையான பெயரை சொல்வதில் வேற்று நாட்டவருக்கு சிக்கல் இருக்கும் என்று இன்னொரு பெயரைச் சூடிக் கொண்டார். சுற்றுலா வழிகாட்டிக்கான பழுப்பு மஞ்சள் சீருடையுடனேயே வந்து கையசைத்தார். அடுத்தது போக்குவரத்துக்கான சாதனம். அதுவும் வந்து சேர்ந்தது. குறுகிய தூரப்பிரயாணங்களுக்கு கம்போடியாவில் அதிகம் உபயோகிப்பது tuk-tuk என்ற சாதனம். அது வேறொன்றுமில்லை சைக்கிளோடு பின் இருக்கைகள் பொருத்திய சாதனம். தமிழர் தாயகப் பகுதியில் சிறீலங்கா அரசின் எரிபொருள் தடை காலத்தில் அதாவது தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வாகனப் போக்குவரத்துக்கு அதிகம் பயன்பட்டது அது. அதுவே இங்கே ருக் ருக் என்ற பெயரோடு அழைக்கப்படும் பொதுப்போக்குவரத்து சாதனம். இங்கே இந்தியாவில் இருக்குமாற் போல ஆட்டோக்களை மருந்துக்கும் காணோம். ருக் ருக் என்ற இந்த சாதனத்தில் போக்குவத்து செய்வது மலிவும் கூட. ஒரு நாள் பகலுக்கான வாடகையாக இந்த வண்டிக்காரருக்கு 15 அமெரிக்க டொலரே செலுத்த வேண்டும். ருக் ருக்கின் பின்னிருக்கையில் நானும் சுற்றுலா வழிகாட்டியும் அமர அங்கோர் வாட்/வற் (Angkor Wat) நோக்கி மெல்ல நகர்ந்தது.

ருக் ருக் ஒரு இடத்தில் வந்து நின்றது. மெல்ல இறங்கி வெளியில் நடந்தால் APSARA Authority என்ற பெயர்ப்பலகையோடு ஒரு கட்டிடம் தென்பட்டது. அங்கே கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் வரிசையில் நின்று நுழைவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கோர் பகுதியில் உள்ள அங்கோர் வாட் என்னும் ஆலயம் தவிர சிறிதும் பெரிதுமாகப் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்பதற்கு மூன்று நாள் நுழைவுச் சீட்டு (Pass)40 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டும். ஒரு நாளுக்கான நுழைவுச் சீட்டு கூட உண்டு. அப்சரா என்பது இந்நாட்டு அரசினால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா அமைப்பாகும். அங்கோர் பகுதியில் உள்ள ஆலயங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு, சேவைகள் என்பவற்றை இந்த அமைப்பே கவனித்துக் கொள்கின்றது. அப்சரா என்பது இந்த நாட்டு மக்களால் போற்றப்படும் ஒரு பெண் தேவதை ஆகும். அப்சரா பற்றி இன்னும் சொல்லவேண்டி இருக்கிறது.

அங்கோர் பகுதியைத் தவிர சியாம் ரீப் நகரின் பிற இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு இந்த நுழைவுச் சீட்டு பயன்படாது. சிலவற்றைப் பார்ப்பதற்கு மேலதிக கட்டணம் கூட உண்டு. சுற்றுலாப் பயணிகள் பலர் அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்தோமா, போனோமா என்றே இருக்கின்றார்கள். ஆனால் முழுமையான பல்லவ மன்னர்களின் வரலாற்றுச் சுவடுகளைப் பார்க்கவேண்டுமென்றால் இது மட்டும் போதாது. எனவே தான் நானும் என் சுற்றுலாவில் மேலதிகமாக இன்னும் பல ஆலயங்களைப் பார்க்க வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டேன். எனவே தான் கம்போடியா - தாய்லாந்து எல்லை வரை என் பயணம் அமைந்திருந்தது. அவை பற்றி ஒவ்வொன்றாகப் பின்னர் சொல்கின்றேன்.

நுளைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டு மீண்டும் ருக் ருக்கில் அமர்கின்றேன். இரண்டு பக்கமும் மரப்புதர் அடங்கிய காட்டுப் பிராந்தியத்தின் நடுவே பயணம் போகின்றது. எங்களைப் போலவே இன்னும் பலர் ருக் ருக்கில் பயணத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீண்ட நாள் உள்நாட்டுப் போர் ஓய்ந்து இப்போது தான் கம்போடியா தன்னை வளப்படுத்திக் கொண்டிருப்பதால் நிறைய வெளிநாட்டு உதவி நிறுவனப் பணியாளர்களைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. ஆண், பெண் வெள்ளையர்கள் ஆளுக்கொரு சைக்கிளை வலித்துக் கொண்டு போவது புதுமையாக இருக்கின்றது.

ருக் ருக் அங்கோர் வாட் முன்னால் உள்ள இடத்தில் ஓரம் கட்டியது. வண்டிக்காரர் அங்கேயே தங்கியிருக்க நானும், டேவிட்டும் இறங்கி மெல்ல நடந்தோம். பங்குனி வெயில் தீயாய் சுட்டெரித்தது. முன்னே இருந்த அகழியின் சுற்று மதிலில் தாவி ஏறி நடக்க ஆரம்பித்தோம். அந்தக் காலை வேளையிலேயே பல சுற்றுலாப் பயணிகள் திரண்டு வந்திருந்தனர்.
"இன்று சனிக்கிழமை அல்லவா, சனி, ஞாயிறு தினங்கள் விடுமுறை என்பதால் தாய்லாந்து நாட்டுக்காரர்கள் தரைவழிப் போக்குவரத்து மூலம் பெரும் திரளாக வந்து அங்கோர் வாட் ஆலயத்தைப் பார்த்துப் போவார்கள், அது தான் இன்று சனக்கூட்டம்" என்றார் டேவிட்.

"இன்னொரு விஷயம், இந்த சியாம் ரீப் (Siem Reap) நகரத்தை இதே பெயரில் அழைக்காமல், அங்கோர் சிட்டி (Angkor City) என்று தான் தாய்லாந்து நாட்டுக்காரர் அழைப்பார்கள். காரணம் இது அவர்களின் மானப்பிரச்சனை. முன்னர் காலத்தில் சியாம் நாட்டவர் (தாய்லாந்துக்காரர்) இந்தக் கம்போடியாவை தம் ஆளுகையில் வைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டதையே சியாம் ரீப் என்ற பெயர் குறித்து நிற்கின்றது. (அதாவது சியாம் - தாய்லாந்துக்காரர், ரீப் - தோற்கடிக்கப்படல் என்ற அர்த்தம்).

என் கண்முன்னே அகண்ட பெரும் கோட்டையாக அங்கோர் வாட்டின் நுளைவு வாயில். ஆர்வ மிகுதியால் வேகமெடுத்துப் போய் அந்த வாயில் சுற்றின் கற்சுவர்களையும் தூண்களையும் பார்க்கின்றேன். ஒவ்வொரு சிற்பங்களும் பிரமிப்பைத் தந்த வேளை கவலையையும் ஏற்படுத்தி விட்டன. காரணம். அப்சாரா என்னும் பேரழகுத் தேவதைகளின் முகங்கள் வாளால் அரிந்தும், துப்பாக்கிச் சன்னங்களால் துளைத்தெடுத்தும் சிதைக்கப்பட்டிருக்கின்றன. மற்றைய நாக விக்கிரகங்கள், இறைச் சின்னங்களுக்கும் இதே நிலை தான். எனது வழிகாட்டி டேவிட் கவலையோடு நடந்ததைச் சொல்ல ஆரம்பிக்கின்றார்.